இளம் எழுத்தாளர் ம.பிரபாகரனின் “கண்ணாடி” சிறுகதை தொகுப்புக்கு
- பாலமுரளிவர்மன் உரை
இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி. படைப்பாளி அவன் வாழும் காலத்தின் கண்ணாடி. தனக்கு முன்னால் நிகழ்வதை அப்படியே பிரதிபலிப்பது அவனது படைப்பொழுக்கம்.
பொறுப்புள்ள படைப்பாளனின் வெளிப்பாடாக உருவெடுக்கும் இலக்கிய வடிவம் எதுவாயினும் அதன் உள்ளடக்கம் ஒப்பனையற்றதாக இருத்தல் அவசியம். அலங்காரம் போர்த்தி தங்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாத நேர்மையோடும், கூச்சத்துக்கு இடமளிக்காத முழு நிர்வாணத்துக்கு ஒப்பான உண்மைத் தன்மையோடும் படைப்பை வெளிக் கொணர்வதற்கு, மாபெரும் துணிச்சல் தேவைப்படுகிறது. தன் சமூகத்தை, தன் மக்களை, அவர்களது அடித்தட்டு வாழ்க்கையை அக்கறையோடு அணுகுபவனுக்கு மட்டுமே அந்த துணிச்சல் சாத்தியமாகிறது. தனது பார்வையினூடாக நிகழ்வுகளைப் பிரதிபலித்திருக்கும் பிரபாகரனுக்கு அந்தத் துணிச்சல் இருப்பதை இத்தொகுப்பு அடையாளப்படுத்துகிறது.
இரவுநேரம். அருகில் இளம்பெண், எகிறி எகிறிச் செல்லும் ஆட்டோவோடுப் போட்டிப் போட்டு இதயமும் குதிக்கிறது. தடுமாற்றம். சலனத்துக்கும், நிதானத்துக்கும் ஊடான பயணம். இடையிடையே தன்னை சுய விசாரணைக்கு ஆட்படுத்திக் கொள்ளும் அன்பழகனின் மனப்போராட்டம். இளமையின் இயலாமை வாசிப்பவனுக்குள்ளும் ஊடுருவுகிறது.
பேருந்துக்கட்டணம் தொடங்கி பெண் வரை எண்ணற்ற கேள்விகளோடு அலையும் மனம். கேள்விகளால் கட்டப்பட்டதும், கட்டவிழ்க்க முயல்வதுமான வாழ்க்கை. தடுமாற்றம் வருவது இயல்புதான்.
எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் எவ்வளவு தூரத்துக்குப் போனாலும் தான் பிறந்த ஊரை நேசிக்கும் ஒருவனது அடிமனதில் சொந்த ஊரின் மண் ஒட்டிக் கொண்டுதானிருக்கிறது. அம்மண்ணின் ஆன்ம சக்தியே அவனை இயக்குகிறது.
தனது அடிப்படை ஆதாரத்தை, எளிமை கலையாத இயல்பை, தொன்மத்திலிருந்து தொடர்ந்து வரும் பண்பாட்டை இன்றைய கிராமங்கள் இழந்து வருவதை நமக்கு “அடையாளம்” காட்டுகிறார் பிரபாகரன். பல சிற்றூர்களில் முதன்முதலாகச் சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவை மாட்டு வண்டிகள் தான். மனிதனின் காலடிப் பட்டுச் செத்துப்போன புற்களின் மீது நடந்து உருவான ஒற்றையடிப் பாதையை விரிவாக்கி அகலச் சாலையாக அமைத்து தந்தவை மாட்டு வண்டிகள்.
நேர்க்கோடாக இல்லாமல் ஒரு ஊரின் சாய்கோணத்தில் நீண்டு கிடக்கும் புதிய பாதையில் அம்மக்களின் வாழ்க்கை பயணிக்கிறது.
ஆற்றிலிருந்து புறப்படும் அல்லது ஆற்றுக்குள் முடிவடையும் பாதையில், அறுவடை முடிந்த வயல்களை அறுத்துச் செல்லும் பாதையில் வேளாண்மை மறந்த நிலத்தின் மீதும், உழவுக்காகாத பொட்டல் காட்டின் நெற்றிப் பொட்டிலும் மாட்டு வண்டிகள் அழுத்தமாய் எடுத்த வகிடுகளில் இன்றும் மனிதர்கள் பயணிக்கிறார்கள். பாதைகள் இருக்கின்றன. ஆனால் பல சிற்றூர்களில் மாட்டு வண்டிகள் இல்லை. மாட்டு வண்டிகள் மறைந்து டிராக்டர்களாக உருமாற்றம் பெற்றுவிட்டதையும் வீட்டின் செல்வமாக வணங்கி மகிழ்ந்த மாடுகள் இல்லாமலே மாட்டுப் பொங்கல் கொண்டாட வேண்டிய சம்பிரதாயத்துக்குச் சனங்கள் ஆட்பட்டு விட்டதையும், வண்டிப் பயணத்துக்காக ஏக்கத்தோடு காத்து நிற்கும் குழந்தைகளின் மனதையும் படிக்கும் போது நமக்குள்ளும் பெருஞ்சுமை குடி கொள்கிறது. பூமியின் நடு நெஞ்சில் மாட்டு வண்டி பதித்துவிட்ட மாறாத தடம்போல் தனது ஆன்மாவை இழந்துக் கொண்டிருக்கும் சிற்றூர்களின் நிலை பளிச் சென்று நம் நெஞ்சில் பதிகிறது.
‘பள்ளித் தோழர்கள்’ கதையில் இளைஞர்களின் அலட்சியப் போக்கினால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக்காட்டும் அதே வேளையில் “பங்களா வீடு” தலைப்பில், பள்ளிக் கூடங்களின் ஏற்றத்தாழ்வு, இளம் சிறாரின் நெஞ்சில் உருவாக்கும் வடுக்களை படம் பிடிப்பதன் மூலம் சமச்சீர் கல்வியை கதாசிரியர் வலியுறுத்துகிறார்.
இவளின் நீதிப் புத்தகம், வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் மகாதேவி தனக்கென வகுத்திருக்கும் நீதியை ஆசிரியர் விவரிப்பதில் நகைச்சுவை வெளிப்பட்டாலும் மகாதேவியின் குணாதிசயம் அவள் மீது இரங்கத் தக்கநிலையை உண்டாக்குகிறது. எழுத்தாளருக்குள்ளிருக்கும் நீதிச் சொல்லும் குணம் எல்லாக் கதைகளிலும் தலை தூக்குகிறது என்றாலும் மகாதேவி விசயத்தில் சற்று தாராளமாகவே நீதியை நிலை நாட்டுகிறது.
“அகதிகள்” கதை மிகவும் அழுத்தமான பதிவு. சொந்த நாடு, சொந்த ஊரு என்று நாம் சொல்லிக் கொண்டாலும் சொந்த வீடு இல்லாதவர்கள் அனைவரும் இங்கே “அகதிகள்” தான் என்பதை பதிவு செய்திருக்கிறார். பிரபாகரனின் படைப்புகள் குறித்து எழுத நேர்ந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி. எளிமையான, உண்மையான படைப்புகளை தமிழ் இலக்கிய வாசகர்கள் அரவணைக்க வேண்டும். அப்போதுதான் “வாழ்க்கை” இலக்கியமாகும். அதற்கான வாசலை வாசகர்கள் திறந்து வைப்பார்கள் என்று நம்புகிறேன். உரை எழுதுகிறேன் என்று பெயரில் படைப்புக்குறித்த முன் கணிப்பை வாசகர்களுக்கு உருவாக்கிவிடக் கூடாது எனவே ஏனையப் படைப்புகள் வாசகர்களின் பொறுப்பு.
பக்கக் கட்டுமானம், படைப்பின் வடிவம், என்கிற எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல் முழுமையான படைப்புச் சுதந்திரத்தோடு, தன்னை துரத்திய வினாக்களையும், தான் துரத்தி அலைந்த வினாக்களுக்குமான தேடுதலையும் பதிவு செய்திருப்பது பிரபாகரனின் அப்பழுக்கற்ற மனமுதிர்ச்சிக்குச் சான்று. மிகச் சாதாரண மக்கள் படும் பாட்டை, பெரும் பதைபதைப்போடு கவனித்து இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என தனக்குள்ளிருந்து வெளிக்கிளம்பத் துடிக்கும் ஒரு படைப்பாளியின் மனநிலையை எல்லாப் பதிவுகளிலும் உணரமுடிகிறது.
படைப்புக்கும், படைப்பவனுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் வாழ்வது அபூர்வம். அந்த வகையில் பிரபாகரன் ஓர் அபூர்வப்படைப்பாளி. பேராற்றல் மிக்க அவருக்குப் பெருங் கனவுகள் உண்டு!
பிரபாகரன் தன் இனம், தன் மக்கள், தன் சமூகம் குறித்த அக்கறையோடும், சக மனிதர்களை நேசிக்கும் குணத்தோடும் திகழ்வதில் வியப்பொன்றுமில்லை. அந்தப் பெயரின் மகத்துவம் அப்படி.!
தம்பி பிரபாகரனின் பெயரை என்றென்றும் தமிழுலகம் சொல்லும்! அவரது கனவுகள் நிச்சயமாய் வெல்லும்!
பாலமுரளிவர்மன்